தயார் நிலையில் இல்லாத மருத்துவ கட்டமைப்புகளைக் கொண்டு கொரோனா வைரசை எதிர்கொள்வது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால்.தென்கொரியா 10 லட்சம் பேருக்கு 5700 பேர் என்ற வீதத்தில் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்தது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரை பரிசோதனை செய்யப்படாமல் விடுவது மிகவும் ஆபத்தானதாகும். உலக சுகாதார நிறுவனம் பேரளவில் பரிசோதனைகள் செய்யப்பட்ட வேண்டும் என்று வலிறுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தோன்றியவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. காரணம், போதுமான ஆய்வு மையங்கள் இல்லை. மாவட்டத்திற்கு ஒன்று கூட இல்லை.இந்நிலையில்தான் சமூகத் தொற்று ஏற்படும் நிலையில் பார்த்துக் கொள்ளலாம் என்ற யோசனையில் உள்ளது அரசு.
அடுத்து வெண்டிலேட்டர்கள். கொரோனா போல வேறு எந்த நோய்க்கும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வெண்டிலேட்டர் தேவைப்படாது. லட்சக்கணக்கில் இங்கே வெண்டிலேட்டர்கள் இல்லை. 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 25778 அரசு மருத்துவமனைகள் மட்டுமே உள்ளன. டாக்டர்கள், நர்சுகள், படுக்கைகள், ஐசியு படுக்கைகள் எல்லாமே பற்றாக்குறைதான்.
இவைகளை எல்லாம் செய்வதை விடுத்து சுய உடல் விலக்கம், சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் ஆகியவற்றை மட்டுமே சர்வரோக நிவாரணியாக முன்வைத்து மிகை அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சீனாவில் வீடுகளில் முடங்கிய மக்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றப் பட்டன.எனவே , அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.இங்கு அது போன்ற நிலை இல்லை. மக்களுக்கு சமூக பொருளாதார உதவிகள் போதுமான அளவில் இல்லை.
43 சதவீத வீடுகளில் மட்டுமே குடிநீர் இணைப்புகள் உள்ள நிலையில் , குழாய் திறந்து அடிக்கடி சேனிடைசர், சோப்பு போட்டு கைகளைக் கழுவுவதெல்லாம் பெரும்பாலான இந்திய மக்களுக்கு ஆடம்பரம்தான்.
சமீபகாலங்களில், உலக அளவில் மருத்துவ நிறுவனங்கள் எல்லாம் தொற்று நோய் அல்லாத வாழ்க்கை முறைகளால் ஏற்படுகின்ற இருதய நோய், புற்றுநோய் போன்றவைகள் பக்கம் தமது கவனத்தை திருப்பியுள்ள சூழ்நிலையில், உலகிலேயே அதிகமான அளவில் மருத்துவ சேவைகளை தனியார்மயப் படுத்திவிட்ட இந்தியாவில் கொரோனா போன்ற கொள்ளை நோய்களை எதிர்த்து போராடுவது கடினமானது. இக் கடினமான நிலைமை நல்லதொரு வாய்ப்பை ஆட்சியாளர்களுக்கு வழங்கி உள்ளது. இனியாவது,பொதுத்துறையில் முதலீடுகள் செய்து அரசு மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
நன்றி: ஃப்ரண்ட்லைன் ஏப்.10,2020
தமிழில்: ம.கதிரேசன்